அரியலூர் மாவட்டத்தில், அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் என மூன்று சட்டசபை தொகுதிகள் இருந்தன. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு சட்டசபை தொகுதி மட்டுமே உள்ளன.
அரியலூர்: 1967 முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த 10 சட்டசபை பொது தேர்தல்களில், அரியலூர் சட்டசபை தொகுதியில், தி.மு.க., நான்கு முறையும், அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு அரியலூர் சட்டசபை தொகுதியில் வன்னியர் 30 சதவீதம், உடையார் மற்றும் மூப்பனார் தலா 20 சதவீதம், தலித் 10 சதவீதம், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 10 சதவீதம் என்ற நிலையில் ஓட்டு வங்கி உள்ளது.
அரியலூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்த பாளை அமரமூர்த்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வான பாளை அமரமூர்த்திக்கு ஆதரவாக, தி.மு.க., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள் களம் இறங்கியுள்ளன. அ.தி.மு.க., சார்பில், கட்சியின் மாவட்ட இணைச் செயலரும், உடையார் சமூகத்தைச் சேர்ந்தவருமான, துரை மணிவேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர், காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் பன்னீர்செல்வம் போட்டியிடுகின்றனர்.
அ.தி.மு.க., வேட்பாளர் துரை மணிவேல், தொகுதிக்கு புதுமுகம் என்பதால், அ.தி.மு.க.,வினர் கோஷ்டி பூசலை மறந்து செயல்படுகின்றனர். அரியலூர் தொகுதியில் 10 சதவீதம் ஓட்டு வங்கியுள்ள தே.மு.தி.க., ஆதரவு அ.தி.மு.க., வேட்பாளருக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. அ.தி.மு.க., வெற்றி பெற்றால் அரியலூர் மாவட்டம் பறிபோவது உட்பட பல்வேறு இழப்பு ஏற்படுமோ என்ற பயம், மக்கள் மத்தியில் தற்போதும் நிலவுகிறது.
தி.மு.க., ஆட்சியில் அரியலூர் பகுதியில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணி, மக்கள் விருப்பத்துக்கேற்ப மீண்டும் "அரியலூர் மாவட்டம்' உருவாக்கப்பட்டது. தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கூட்டணி கட்சிகளின் ஆதரவு போன்ற சாதகமான அம்சங்கள், அரியலூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கூடுதல் பலம்.
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி, உடையார்பாளையம், வரதராஜன் பேட்டை பேரூராட்சிகள், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியங்கள், தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு சில வருவாய் கிராமங்களைக் கொண்ட ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் வன்னியர் 55 சதவீதம், தலித் 20 சதவீதம், முதலியார் 10 சதவீதம், வெள்ளாளர், யாதவர் உள்ளிட்ட இதர சமூகத்தினர் 15 சதவீதம் பேர் உள்ளனர்.
தற்போதைய தேர்தலில், பா.ம.க., சார்பில், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க., காங்., வி.சி., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், குரு வெற்றிக்காக முழு வீச்சில் களம் இறங்கியுள்ளனர். அ.தி.மு.க., சார்பில் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலரும், அரியலூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மூப்பனார் சமூகத்தைச் சேர்ந்தவருமான இளவழகன், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சியும் தன் பங்குக்கு, ராமச்சந்திரன் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்கு காரணமான அம்சங்களை கண்டறிந்து, அவற்றை தவிர்க்கும் வகையில், முதலியார் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூக மக்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், காடுவெட்டி குரு செயல்படுகிறார்.
அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி செல்வாக்கும், பணபலமும் மிக்க இளவழகன், ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்கு வேட்பாளர் என்றாலும், சட்டசபைத் தேர்தல் வெற்றியை நிர்ணயிப்பதில், ஜாதி பலமும் முக்கிய காரணியாக அமையும் என்பது, அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது, கூட்டணி கட்சியினர் செயல்பாட்டில் தான் உள்ளது.
முக்கிய தொழில் : விவசாயம், நெசவு
நீண்டகால கோரிக்கைகள் : கொள்ளிடத்தில் தடுப்பணை, முந்திரி தொழிற்சாலை, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.
NANDRI WWW.DINAMALAR.COM
அரியலூர் தொகுதியில் அசைக்கமுடியாத மாவீரன் அண்ணன் உயர்திரு பாளை அமரமூர்த்தி. நீங்கள் அதரவாக எழுதினாலும் எழுதவிட்டாலும் முடிவு இதுதான். அண்ணன் அதிகபடியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். அன்புடன் பளையர்தொண்டன்


