Pages

Wednesday, February 2, 2011

அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை : காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர்: "அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை துவக்க நடவடிக்கை மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம், அரியலூரில் கட்சியின் மாவட்ட தலைவர் எம்.எல்.ஏ., பாளை அமரமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீதர், திருமானூர் பஞ்.,யூனியன் சேர்மன் நடராஜன், பெரம்பலூர் நகராட்சி தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர்.

 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வரும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா ஆணைப்படி அமையவுள்ள கூட்டணியை வெற்றிபெற செய்ய, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பாடுபடுவது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி ஆகியவற்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்வது.

 

பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டு கொள்வது. அரியலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையை உடனடியாக துவக்கிட நடவடிக்கை மேற்கொள்ளும்படி தமிழக அரசை கேட்டு கொள்வது.

 

அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆஃபீஸ் முன் அமைந்துள்ள ரவுண்டானாவில், ராஜீவ் சிலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். அரியலூர் புறவழிச்சாலை பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அரியலூர் சட்டசபை தொகுதியில் பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க தமிழக அரசை கேட்டு கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காங்கிரஸ் மாவட்ட பொதுசெயலாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

கூட்டத்தில், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் வேப்பூர் மோகன், இளவரசன், ஆலத்தூர் அசோகன், ராஜேந்திரன், செந்துறை கொளஞ்சிநாதன், சுப்ரமணியன், அரியலூர் கோவிந்தராஜ், சௌந்தர்ராஜன், திருமானூர் வீரரவி, ஜெயங்கொண்டம் அன்பழகன், தா.பழூர் முருகையன், ஆண்டிமடம் மாணிக்கவேல், சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment