அரியலூர் விழாவில் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
அரியலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, பெரியார் நினைவு சமத்துவபுரம் திறப்பு விழா, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும் விழா, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் விழா, புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியலூர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கினார். மத்திய மந்திரி து.நெப்போலியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி வரவேற்று பேசினார்.
துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 1500 பேருக்கு வீடுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விழாவிலே 1512 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல்நிதி வழங்கப்பட இருக்கிறது. கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டு நாளை முதல் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. கடந்த தி.மு.க.ஆட்சியில் 145 இடங்களில் சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டன.
2006-ல் மீண்டும் கழக அரசு அமைந்ததும் முதல்வேலையாக சமத்துவபுரங்களை பராமரிப்பதற்காக ரூ.14? கோடி நிதியை முதல்-அமைச்சர் கலைஞர் ஒதுக்கினார். 2008-2009-ல் 29 சமத்துவபுரங்கள் கட்டி முடித்து திறக்கப்பட்டன. 2009-2010-ல் 30 சமத்துவபுரங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அவற்றிலே ஒன்றை இன்று காலை சேலம் ஆத்தூரில் திறந்து வைத்தேன்.
இப்போது திறக்கப்பட்டிருப்பது 21-வது சமத்துவபுரம் இன்னும் மீதி உள்ள 9 சமத்துவபுரங்களும் இம்மாத இறுதிக்குள் திறக்கப்படும். மீதி உள்ள 36-ம் விரைவாக கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழு மாபெரும் இயக்கமாக கம்பீர நடைபோடுகிறது. இந்த திட்டம் மூலம் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க மன உறுதியை பெற்று உள்ளனர்.
இன்று காலையில் நடைபெற்ற விழாவுடன் சேர்த்து ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் இதுவரை 1லட்சத்து 88 ஆயிரத்து 156 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியையும், வங்கிக்கடனையும் வழங்கி இருக்கிறேன். இதனை நான் நின்று கொண்டே வழங்குவதற்காக செலவு செய்தது 122 மணிநேரமாகும். இந்தநேரத்தை நான் செலவு செய்ததாக நினைக்கவில்லை பெருமையாகத்தான் கருதுகிறேன்.
அதற்கு காரணம் நிதியை பெற்றுச்செல்லும் பெண்களின் முகத்தில் காண்கிற மகிழ்ச்சி எனது உடலில் ஏற்படும் சோர்வைக்கூட பறந்து போகச்செய்துவிடுகிறது. அந்த அளவிற்கு பெண்கள் இந்த ஆட்சி மீதும், ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிற கலைஞர் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கலைஞர் 6-வது முறையாக முதல்-அமைச்சர் ஆவதற்கு வருகிற தேர்தலிலும் இந்த ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு துணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், ராஜேந்திரன், பாளை.அமரமூர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னாள் எம்.பி.சிவசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம்,அரியலூர் ஒன்றியக்குழு தலைவர் அருணாபாலு,பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித்தலைவர் கொடியரசி துரைசாமி, வாலாஜாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர் தெய்வ.இளையராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெல்லா நன்றி கூறினார்.

0 comments:
Post a Comment